சந்தர்ப்பத்தை தவற விடாது தடுப்பூசியைப் பெறுங்கள்! - யாழ். பல்கலை துணைவேந்தர்
கோவிட் தடுப்பூசிகளைத் தவறவிடாது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிசற்குணராஜா தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது தடுப்பூசியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெற்ற பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தடுப்பூசி என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு வரப்பிரசாதம். அதாவது அம்மை, போலியோநோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு தடுப்பூசியைப் பெற்றிருக்கின்றோம் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இந்த கோவிட் என்று சொல்லப்படுகின்ற வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் அதன் தாக்கமானது உணரப்படுகின்றது.
அந்த வைரஸ் நம்மைத் தேடி வராது. ஆனால். நாமாகவே அந்த வைரஸைப் பற்றி கொள்கின்றோம். அதுதான் உண்மை. இந்தக் கொடிய வைரஸால் உலகில் கோடிக்கணக்கில் மக்கள் தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் தமது ஆயுளை இழந்துள்ளார்கள். இது ஒரு பாரிய ஒரு வைரஸ் நோயாகக் காணப்படுகின்றது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இதற்குத் தடுப்பூசி தான் ஒரேயொரு வழியாகும்.
அமெரிக்கா, ரஷ்யா இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளன. எனினும், யாழ். மாவட்டத்துக்கு சீனா நாட்டினுடைய சினோபார்ம் தடுப்பூசியே வழங்கப்பட்டுள்ளது.
எமது ஆய்வின்படி அது ஒரு சிறப்பான தடுப்பூசியாகவே காணப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்துக்கு இந்த தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் எமக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமையவே வழங்கப்பட்டுள்ளது. விசேட அனுமதி பெற்றுத்தான் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இன்று எமது பணியாளர்கள் தடுப்பூசியைப் பெறுகின்றார்கள்.
யாழ். பல்கலைக்கழகத்தில்பணிபுரியும் 2 ஆயிரத்து 100 பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது கிளிநொச்சி, வவுனியா, மருதனார்மட வளாகங்களில் கடமைபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட பொதுமக்களும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசியை இனிவரும் காலங்களில் பெறுவது மிகவும் கடினமான விடயமாகும். ஏற்கனவே இந்தியத் தடுப்பூசி வந்தது.
எனினும், அது இரண்டாம் கட்டமாக வரவில்லை. எனவே, இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதாயின் பல வருடங்கள் செல்லும். எனினும், யாழ். மாவட்டத்துக்கு அரசால் ஒரு தொகுதி தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்துக்குக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதேவேளை, இந்த சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் பலவிதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இளைஞர்கள் தடுப்பூசி போட்டால் இனவிருத்தி பாதிப்பு ஏற்படும் எனக் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறு எதுவுமே இல்லை. மக்கள் மத்தியில் அந்த கருத்துருவாக்கம் உருவாக்கப்படுகின்றது. இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள் இந்த ஊசியைப் போட்டால் கரு உருவாகாது என்றெல்லாம் கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றது.
இந்தக் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை . எனினும், 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏன் போட வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் கூடுதலாகக் காணப்படும் என்பதனால்தான்.
யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் குறித்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவித
தயக்கம் காட்டக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை
விரைந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.