ஸ்தம்பிக்கப்போகும் மருத்துவ சேவைகள்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (டிசம்பர் 21)காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை அறிவித்துள்ளார்.
எனினும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நடவடிக்கையின் போது அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சேவைகளில் பாதிப்புக்கள் ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம் பிரசவ மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள் மற்றும் மஹரகம புற்றுநோய் மருத்துவமனையின் பணிகளில் இடையூறு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மருத்துவர்களை நியமிப்பதில் உரிய முறைகள் பின்பற்றப்படாமை, 2022 இடமாற்ற பட்டியலை வெளியிடாமை உட்பட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளகப் பயிற்சியாளர்களின் நியமனங்களில் சுகாதார சேவை செயலாளரின் நடவடிக்கையை கண்டித்து இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று மன்னார், திருகோணமலை, நுவரெலிய மற்றும் ரத்தினபுரி, பொலநறுவை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்