யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: சிரமப்படும் நோயாளர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்திய சேவையில் உள்ளோர் இன்று நாடு பூராகவும் பகீஸ்கரிப்பில் ஈடுபடுகின்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறுகிறது.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மாத்திரம் இயங்குகின்றன. அத்தோடு வெளிநோயாளர் பிரிவில் நாய்க்கடிக்கு உள்ளாகியோருக்கு சிகிச்சை நடைபெறுகின்றது அதேபோல் கோவிட் தடுப்பு மருந்து வழங்கல் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
மேலும் அத்தியாவசியமான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சிரமங்களுக்கு மனம் வருந்துகிறோம் உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும்போது தொற்றுகின்ற நோயாகக் காணப்படுகின்றது.
இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம் தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாம். எனவே நாய் பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். காய்ச்சல் வரும்போது உரிய மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும்.
அதே போல டெங்குகாய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் சுமார் 10 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள்.
எனவே பொதுமக்கள் தம்மை டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளச் சுற்றுச்சூழலைச் சுகாதாரமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும்.
அத்துடன் சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனோபிளிஸ் நுளம்பினால் பரப்பப்படுகின்ற நோயாகும்.
எனவே யாழ் போதனா வைத்தியசாலையினை சூழ உள்ள ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். குறிப்பாகக் கட்டிடங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் என்பவற்றில் நீர் தேங்கி இந்த நுளம்பு பெருகும்.
எனவே மலேரியாவை எமது நாட்டில் மீண்டும் நுளம்பினை பரவச் செய்யாது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் பொறுப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் மலேரியா கட்டுப்படுத்தி உலக சுகாதார நிறுவனத்தினால் பாராட்டைப் பெற்றது. இதேபோல் 1963 ஆம் ஆண்டளவில் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டு கவனக்குறைவினால் மீளப் பரவியது.
மலேரியா பரப்புகின்ற நுளம்பு எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற மையினாலும் தற்போது நோயாளி இனங்காணப்பட்டுள்ளமையாலும் நாங்கள் நுளம்பினை கட்டுப்படுத்தற்குரிய கவனம் எடுத்தல் வேண்டும்.
அத்தோடு சுகாதாரப் பிரிவினர் நுளம்பு குடம்பிகளில் மலேரியா நோய் தன்மை உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறார்கள். எனவே எமது முயற்சியின் பயனாகவே இதனைத் தடுக்க முடியும்.
குறிப்பாக மலேரியா நோய் உள்ள நாடுகளிலிருந்து வருவோர் கட்டாயமாகத் தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். அதோடு அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது அவர்களுக்குக் கட்டாயமாக மலேரியா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவை அனைத்தும் யாழ் போதனா காணப்படுகின்றது. அதனைப் பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும் மலேரியா நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதனால் இலங்கையில் பரவுவதற்குச் சாத்தியக்கூறுகள் குறைவு.
ஆனால் வெளிநாடுகளிலிருந்து அதாவது மலேரியா தொற்று உள்ள நாடுகளிலிருந்து இங்கு வருவோர் கட்டாயமாக தமக்குரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலில் மலேரியா நோய்க் கிருமி தொற்றக் கூடிய ஏதுநிலை காணப்படலாம் ஒரு நோயாளி உள்ளதன் காரணமாக இந்நிலைமை சாத்தியம். எனவே மாநகர சபையினர் யாழ் போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு நுளம்பு பெருகும் குப்பை கூழங்களை உடனடியாக அகற்ற வேண்டும். ஒமிக்ரோன் வைரசானது மேலைத்தேய நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது.
எனினும் இலங்கையைப் பொறுத்தவரைப் பெரும்பாலானோர் தடுப்பூசியினை பெற்றதன் காரணமாகத் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு. கோவிட் தடுப்பூசி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
அனைவரும் பெறும் போது ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவாகும். எனினும் இது தொடர்பில் நாம் அதிகம் பயப்படத் தேவையில்லை எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் அநாவசியமாக நடமாடுவதைத் தவிர்த்து கூட்டம் கூடுவதைத் தவிர்த்தால் இந்த தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
குறிப்பாக கோவிட் தடுப்பூசி பெறாதவர்களை இந்த ஓமிக்ரோன் வைரசானது கடுமையாகப் பாதிக்கும். எனவே சிறுவர்களை நாம் இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குக் கட்டாயமாக தடுப்பூசியினை பெற வேண்டும். அத்தோடு எமது பிரதேசங்களில் தடுப்பூசியினை பெற பின்னடிப்பது மிகவும் தவறானது.
எனவே அனைவரும் இந்த மூன்றாம் கட்ட தடுப்பூசியினை போடுவதன் மூலம் ஒமிக்ரோன்
வைரசில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அத்தோடு நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிப்பதன் மூலம் ஒமிக்ரோன் போன்ற வைரஸ்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்
கொள்ள முடியும் என்றார்.
