யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தியர் தாக்குதல் விவகாரம் : பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17ஆம் திகதி(17.09.2025) அன்று இரவு வைத்தியர் ஒருவர் உரும்பிராய் சந்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடாத்தினர்.
பின்னர் குறித்த வைத்தியர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மூவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர் மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார், இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்த இருவரையும் விடுவிக்குமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கூறியமைக்கு அமைவாக பிணை எதுவுமின்றி அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் விடுவித்தமையானது குறித்த கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையே தொடர்பு உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து செய்திகள் வெளிவந்த நிலையிலேயே தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் இருவரும் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



