மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பால் திருப்ப வேண்டாம்: இம்ரான்
மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரைக் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால் அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள், மின்சாரம், எரிவாயு, உணவுப் பொருட்கள் என அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பொறுக்கமுடியாமல் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கும் நிலை வந்துள்ளது.
இதன் ஆரம்பக் கட்டமே நேற்று மிரிஹானவில் இடம்பெற்றது. நாட்கள் செல்ல செல்ல நிலை இன்னும் மோசமாகலாம்.ஆனால் இந்த மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதம் என்ற பெயரில் அரசாங்கம் திசை திருப்ப முயல்கிறது.
அடிப்படைவாதம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றதன் சாபத்தையே இந்த அரசு இப்போது அறுவடை செய்கிறது. ஆனால் இதிலிருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் அடிப்படைவாதம், மதவாதம் பேசி மக்கள் போராட்டத்தை அரசு திசை திருப்ப முயல்வது நிலைமையை இன்னும் மோசமாக்கும். அடிப்படைவாதத்தைத் தான் ஆட்சிக்கு வந்து அழித்துவிட்டதாக ஜனாதிபதி அடிக்கடி கூறினார்.
ஆனால் இன்று அவருக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்து எழுந்த போது மீண்டும் அடிப்படைவாதத்தின் பெயரைக் கூறி அவர் தப்பிக்க முயல்வது, யார் அடிப்படைவாதத்தின் பின்னால் உள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பட்டினியால் வாடும் மக்களுக்கு அடிப்படைவாதம் சோறு போடாது என்பதைப் பெரும்பான்மை மக்கள் உணர்ந்துவிட்டனர்.
ஆகவே
மிரிஹானவில்
ஆரம்பித்த மக்கள் கிளர்ச்சியை
அடிப்படைவாதம் பேசி யாராலும் தடுக்க முடியாது. ஆகவே அடிப்படைவாதத்துக்குப்
பின்னால் ஜனாதிபதி ஒழிந்து கொள்ளாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய நாட்டை
உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் இதைவிட பாரிய போராட்டங்கள் நாடு முழுவதும்
நடைபெறும் என்பதை அரசு உணர வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



