புதிய திரிபுகளால் வேகமடையும் தொற்று! மரணங்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
''தேவையற்ற விடயங்களுக்கு பொறுப்பை தட்டிக்கழிக்கின்ற ஒவ்வொரு நொடியும் மரணம் எங்களை நெருக்குகிறது"
கோவிட் வைரஸிற்கு இரண்டு வயது அண்மிக்கின்ற தருவாயில், முழு உலக நாடுகளும் கோவிட் என்ற அச்சத்திலிருந்து மீளமுடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.
இலங்கையின் நிலைமையோ நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவே தெரிகின்றன. மரணங்கள் 200 ஐ தாண்டியே பதிவாகின்றன. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சில நேரங்களில் கோவிட் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றதையும் காணக் கூடியதாகவுள்ளது.
கோவிட் தொற்றின் ஆபத்து அதிகரித்தால் நாட்டை முடக்குமாறு பொது மக்களாகிய நாங்களும் கோரிக்கைவிடுக்கின்றோம். நாடு முடக்கப்பட்டால் சில நேரங்களில் நாங்களும் எங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்கின்றோம் என்பதை மறுக்கமுடியாது.
நாடு முடக்கப்பட்டிருக்கும்போது அன்றாட ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகுவதால் அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக வீடுகளை விட்டு வெளியே வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகின்றன.
ஒரு பக்கத்தில் அரசாங்கம் தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றத்தவறும் போது நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மறுப்பக்கத்தில் அரசாங்கம் பொறுப்பை நிறைவேற்றும்போது பொது மக்களாகிய நாங்கள் பொறுப்பை தட்டிக்கழின்றோம்.
அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கும்போது நாங்கள் அதனை தவறாக பயன்படுத்துகின்றோம் என்பது மனசாட்சியின்படி ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகவுள்ளது.
கோவிட் கட்டுப்பாட்டுக்கு பொது மக்களாகிய எங்களுடைய ஒத்துழைப்பு இன்றியமையாதது. அரசாங்கம் நாட்டை பற்றி சிந்தித்து செயற்படுவது போன்று, நாங்கள் எங்களையும் எங்களுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியதும் இன்றியமையாதது.
சில தரப்பினர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக சட்டத்திட்டங்களை மீறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் சிலர் எவ்வித தேவைகளுமின்றி அநாவசியமாக வெளியில் நடமாடுவதையும் காணக்கூடியாக இருக்கின்றது. பொறுப்பற்ற வகையில் இவ்வாறு செயற்படும் ஒரு சில தரப்பினரினால் முழு சமுதாயமும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
ஒரு முறை நாம் வீடுகளிலிருந்து வெளியேறும்போது, ஏதேவொரு இடத்தில் முழு குடும்பமும் கோவிட் பிடிக்குள் சிக்கிக்கொள்கின்றது என்பதை மறந்து செயற்படுவோமானால் நாளை எங்களுடைய குடும்பமும் கோவிட் பிடிக்குள் சிக்கிக்கொள்வதை தவிர்க்கமுடியாது.
இதுவரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி 63 ஆயிரத்திற்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்களாயின் இவர்கள் தங்களுடைய பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லை.
இவர்கள் சட்டங்களை மீறுவதால் இவர்களே தங்களை கோவிட் தொற்றுக்குள்ளாக்கிக் கொள்கின்றதாக சுகாதார துறையினர் சுட்டிகாட்டியுள்ளனர்.
ஒரு சில தரப்பினர் சட்டத்திட்டங்களை மீறி வெளியேறுவது தங்களின் வயிற்றுப்பசியை போக்க வேண்டிய கட்டாயமே தவிர அநாவசியமான தேவைகளுக்காக அல்ல. இவ்வாறான தரப்பினர் உங்களின் வீடுகளுக்கு அருகில் இருந்தால் உங்களால் முடிந்த உதவிகளை செய்யும்போது அவர்களுக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அவசியமிருக்காது.
நிச்சயமில்லாத உலகில் வாழ்கின்றபோது, நாம் மற்றவருக்கு முடிந்த உதவிகளை செய்வோமாக இருந்தால் நாம் மாத்திரமல்ல நம் சமூகத்தையும் இந்த கோவிட் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும்.
தேவையற்ற விடயங்களுக்கு பொறுப்பை தட்டிக்கழிக்கின்ற ஒவ்வொரு நொடியும் மரணம் எங்களை நெருக்குகின்றது என்பதை மனதில் கொள்ளவேண்டும். அரசாங்கம் தங்களால் முடிந்ததை செய்யும்போது, பொது மக்களாகிய நாங்களும் எங்களுடைய பொறுப்பை தட்டிக்கழிக்காதிருக்க வேண்டும்.
பொது மக்களின் உயிரை பாதுகாக்க தடுப்பூசிகள் வழங்கப்படுகின்ற போது, நாம் எங்கு எந்த தடுப்பூசியை பெறவேண்டும் என்பதை ஆராயாது தங்களுடைய பகுதிகளில் வழங்கப்படுகின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் நாம் எதனையும் பெற்றுக்கொள்ளாத போது மீண்டும் அதே சந்தர்ப்பம் எமக்கு கிடைக்காது. தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியது எங்கள் அனைவரின் பொறுப்பாகும். அதனை நாம் தட்டிக்கழித்தால் அது எமக்கு மாத்திரமல்லாது எங்களை சுற்றியுள்ளவர்களையும் ஆபத்துக்குள் தள்ளும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் தங்களுடைய பொறுப்பை நிறைவேற்றத் தவறினாலும் நாம் ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்காது நிறைவேற்றுவோமாக இருந்தால் தொற்றிலிருந்து மீளமுடியும். சட்டத்திட்டங்களால் எல்லோரும் பாதிக்கப்படுகின்றோம். ஆனால், அதனை விட ஆபத்து எம்மை நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றது என்பதை சற்று உணர்வோமாக இருந்தால் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளார் ஹேமந்த ஹேரத்
'நாடு திறக்கப்பட்டாலும் தேவையற்ற வித்தில் வெளியேறாதிருந்தால் தொற்றை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்"
கோவிட் தொற்று வேகமாக பரவிவருவதால் நாளுக்கு நாள் நாங்கள் தொடர்ந்து சுகாதார ரீதியில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றோம். இந்த நிலையில், அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை முறையாக பொது மக்கள் பேணும்போதே நாங்கள் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும். இவ்வாறான பொது மக்களின் செயற்பாடுகள் மூலமே இந்தத் தொற்றை கட்டுப்படுத்த முடியும். சமூக இடைவெளியை பேணவேண்டும் என்பதற்காகவே சட்ட ரீதியான பயணக்கட்டுப்பாட்டை விதித்து தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு போராடுகின்றோம்.
இதன்போது, பொது மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியேறாது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வதே தற்போது பொது மக்களின் பொறுப்பாகவுள்ளது. நாடு முடக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்தாலும் பொது மக்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
எனினும், பொது மக்கள் பொறுப்பற்றவகையில் வெளியில் நடமாடுவதால் மீண்டும் மீண்டும் நாங்கள் தொற்றை பரவுவதற்கே இடமளிக்கின்றோம்.
நாடு முடக்கப்பட்டாலும் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறாது, நாடு முடக்கப்பட்டால் நாம் எவ்வாறு வீடுகளை விட்டு வெளியேறாதிருக்கின்றோமோ அதேபோன்று, நாடு திறக்கப்பட்டாலும் தேவையற்ற வித்தில் வெளியேறாதிருந்தால் தொற்றை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
நாடு திறக்கப்பட்டவுடன் பொதுமக்கள் அனைத்து பகுதிகளுக்கும் தாங்கள் விரும்பியது போன்று செயற்பட ஆரம்பித்தால் நாங்கள் மீண்டும் ஆரம்பத்திற்கே செல்லவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே, முடிந்தவரை ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ளல், தேவையற்ற விதத்தில் வீடுகளிலிருந்து வெளியேறுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்துகொள்ளும் பட்சத்திலேயே நாங்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ
'சட்டங்களை மீறி செயற்படுவதால் அவர்களே தங்களை கொவிட் தொற்றுக்குள்ளாக்கி கொள்கின்றனர்"
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிட் தொற்று ஆபத்து குறித்து தற்போது பொதுமக்கள் போதுமான படிப்பினைகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த படிப்பினைகளைக் கொண்டு கோவிட் தொற்று பரவலை தடுப்பதே முக்கியமானது.
அதற்கு தேவையான சுகாதார விதிமுறைகளைக் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, அமுல்படுத்தப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பொது மக்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதோடு, அதற்கு தேவையான ஒத்துழைப்பையும் பொது மக்கள் வழங்கவேண்டும்.
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதால் பொது மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்துக்கொள்வதே அவர்களுடைய பொறுப்பாகவுள்ளது.
ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டதிட்டங்களை மீறி செயற்படுகின்றமை அதிகரித்துள்ளதால், சட்டங்களை மீறுவோர் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
பொது மக்களின் பாதுகாப்புக்காக அமுல்படுத்தப்படுகின்ற சட்டங்களை மீறி செயற்படுவதால் அவர்களே கோவிட் தொற்றுக்குள்ளாகின்றதுடன், அவர்களால் சமூகத்திற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். பொறுப்பற்ற வகையில் பொது மக்கள் செயற்படும் பட்சத்தில் கோவிட் தொற்றை எங்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சவாலானதாக மாறுவதோடு, கோவிட் தொற்றிலிருந்து நாட்டை மீட்பதற்கு நீண்டகாலம் செல்லும்.
இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் ஒழுக்கமாக செயற்படுவதோடு, தங்களுடைய பொறுப்பையும் முறையாக நிறைவேற்ற வேண்டும்.
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லாத காரணத்தினால் பொது மக்களின் நடமாட்டங்கள் குறைவாக இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு சொந்த வாகனங்களில் வருகைத் தருவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் நாளுக்கு நாள் 500 பேர் வரை தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்றனர். இதுவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 63 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்வதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்
'பொது மக்களின் ஒத்துழைப்பு உச்சபட்சத்தில் கிடைக்கும்போதே, கொவிட் கட்டுப்பாட்டின் முகாமைத்துவம் சிறப்பாக இருக்கும்"
கோவிட் தொற்றானது நாட்டில் மிக ஆபத்தானதாக உருவெடுத்துள்ளதால் நோயாளர்களும் மரணங்களும் அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில், ஆட்சியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரும் கோவிட் கட்டுப்பாட்டுக்கான ஒத்துழைப்பை வழங்கவேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.
கோவிட் கட்டுப்பாட்டுக்கு பிரதானமாக பொது மக்களின் ஒத்துழைப்பு பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன. பொது மக்களின் ஒத்துழைப்பு உச்சபட்சத்தில் கிடைக்கும்போதே, கோவிட் கட்டுப்பாட்டின் முகாமைத்துவம் மிக சிறந்ததாக இருக்கும். பொது மக்களின் ஒத்துழைப்பு பெயரளவில் இல்லாது செயற்பாட்டளவில் இதய பூர்வமாக வழங்கும்போதே தொற்றை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், தங்களுக்கு தெரிந்த 60 வயதிற்கு மேற்பட்ட உறவினர் யாரும் இருந்தால் அவர்களை உடனடியாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். நாட்டில் ஏற்படும் மரணங்களில் அதிகமான மரணங்கள் 60 வயதிற்கு மேற்பட்டதாகவே இருக்கின்றன.
இதனை கருத்தில்கொண்டு தடுப்பூசிக்கு பொது மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். குறிப்பாக, தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தனிநபர் கடமையாக கருதாது, சமுதாய கடமையாக கருதி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இதேவேளை, தடுப்பூசிகள் மாத்திரம் தொற்றுக்கு தீர்வாகாது. சுகாதார விதிமுறைகளையும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, தனி நபர் இடைவெளி, ஆரோக்கியமான சுவாச பொறிமுறையை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்று சுகாதார விதிமுறைகளை பொது மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோன்று, தேவையற்ற விதத்தில் ஒன்றுகூடுதல், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வீடுகளிலிருந்து வெளியேறுதல் போன்றவற்றையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பொதுமக்கள் அடிபணிந்து செயற்பட வேண்டும். எந்தவொரு கட்டுப்பாட்டுக்கும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவது முக்கியமாகும்.
கிராம புறங்களில் பொது மக்கள் தேவையற்ற விதத்தில் சுற்றித்திரிவதாகவும் வீடுகளில் விருந்தினர்களை அழைப்பது போன்று செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான விடயங்களை தவிர்த்துக்கொண்டு தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலையை பொது மக்கள் அவதானமாக கடக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கைவிடுக்கின்றோம்.
புதிய புதிய திரிபுகளினால் தொற்றுப்பரவல் வேகமடைவதோடு, மரணங்களும் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றன. இதனால், பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட்டு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.
-தமிழன்-
(யோ.தர்மராஜ்)