சம்மாந்துறை பேருந்து டிப்போவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்
சம்மாந்துறையில் அமைந்துள்ள இ.போ.சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலேயே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும், அவை வெற்றியளிக்காமையால் இ.போ.சபைக்குச் சொந்தமான டிப்போவை அங்கேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் இன்று காலை அந்த சாலைக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், பிராந்திய தலைவர்கள் எனப் பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறையில் அந்த டிப்போ இருப்பதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன. இந்த இடத்திலிருந்து அந்த டிப்போ அகற்றப்படுவதனால் சம்மாந்துறை பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை அனுபவிக்கும் நிலை காணப்படுகிறது.
பெண்கள், பாடசாலை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் கடுமையான அசௌகரியங்கள் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளனர்.


