பொதுமக்களை துன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ வேண்டாம்! பொலிஸ்மா அதிபர் பணிப்பு
சோதனையின்போதும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் போதும் பொதுமக்களை துன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ கூடாது என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால், அதற்கு எதிராக உயர் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போதும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களைச் செயல்படுத்தும்போதும், பொலிஸார் வாகனங்கள் மற்றும் மக்களை சாலைத் தடைகள் மற்றும் ஏனைய இடங்களில் சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.
சில பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது காணொளிக் காட்சிகளிலும் ஊடகங்களிலும் காண்பிக்கப்பட்டன.
சில அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், பொதுமக்கள் மத்தியில் பொலிஸாரின் நற்பெயருக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வாகனங்கள் மற்றும் மக்களை சோதனை செய்ய வேண்டும் என்றும், சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுபோன்ற துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்துமாறு அவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்களை துன்புறுத்துவது அல்லது தர்மசங்கடப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் அந்தந்த பகுதிகளில் தலைமையகம் அல்லது பொறுப்பதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல்துறை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.