வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(25.08.2026) வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆகப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்.

யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அதேபோல் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பூரண ஆதரவு
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஒரு வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

அந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று சர்வதேசம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
அவர்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் வரவேண்டும். அதே போன்று ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய நாங்களும் அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.