முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ள அபாயகரமான வெடிபொருட்கள்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை பதினேழு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐந்நூற்று எண்பத்து நான்கு சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று இருபத்தேழு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனம் நேற்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
அதாவது மீள் குடியேற்றம், விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகளை விரைவு படுத்தும் வகையில் இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபட்டு வரும் ஸார்ப் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது குறித்த பணியை முன்னெடுத்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இருபத்தொன்பதாயிரத்து நானூற்று இருபத்தேழு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
பதினேழு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐந்நூற்று எண்பத்து நான்கு சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று இருபத்தேழு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.