வடக்கு சுகாதாரத்துறையின் சவால்கள் குறித்து அமைச்சர் நளிந்தவுடன் முக்கிய கலந்துரையாடல்
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.9.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடுகள்
இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை



