யாழில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் (Photos)
ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அனர்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது யாழ். மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்த முகாமைத்துவத்தை பொறுத்த வரையில் குறுகிய நேரத்தில் அனர்த்தம் சம்பந்தமான முன்னெச்சரிக்கை தகவலை மக்களிடம் தெரிவிப்பது சவாலான ஒன்றாக இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் அதனை ஊடகங்கள் மிக விரைவாக தெரியப்படுத்த வேண்டும்.
அத்துடன் யாழ். மாவட்டத்தினை பொறுத்தவரையில் வெள்ளப்பெருக்கு, வரட்சி வடமராட்சிப் பகுதியில் சவுக்கு மரத்தில் ஏற்படும் காட்டுத் தீ போன்றவையே அனர்த்தங்களாக இருக்கின்றது.
இவ்வருடத்தில் யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சென்ற வருடத்தினை விட அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இவ்வருடம் சமமான கால இடைவெளியில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் அதிகளவான பாதிப்புகள் ஏற்படவில்லை.குறிப்பாக புரட்டாதி, ஐப்பசி மாதம் காலப்பகுதியிலே அதிகளவான தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் வளிமண்டல அலுவல்கள் பொறுப்பதிகாரி பிரதீபன், யாழ். ஊடகவியலாளர்கள் மற்றும் அனர்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


