ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்பு: தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படும் 7 பேர்
அடிப்படைவாத கருத்துக்களை இணையத்தளம் வழியாக பரப்புரை செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நேரடியான தொடர்புகளை கொண்டிருநதனர் எனக் கூறப்படும் ஏழு பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் நேற்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இதனை கூறியுள்ளனர்.
பொலன்நறுவை, காத்தான்குடி, வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் இந்த சந்தேக நபர்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில், விசாரணைகளை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதவான், பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.