தினேஷ் ஷாப்டர் மரணத்தில் திடீர் திருப்பம் - வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணை
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷாப்ட்டர் தனது மாமியாருக்கு (மனைவியின் தாய்) எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் புலனாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உணர்ச்சிகரமான கருத்துகள் அடங்கிய கடிதம் மற்றும் அவருக்கு அனுப்பப்பட்ட அந்தக் விடயங்கள் அடங்கிய குறுஞ்செய்தி குறித்து புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த குறுந்தகவலில் சிறந்த மகளை பெற்றுக்கொடுத்தமைக்காக நன்றி என்று குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தினேஷ் ஷாப்டர் பயணித்த காரில் யாரும் பயணிக்கவில்லை என்பதற்கு சிசிடிவி காட்சிகளில் தெளிவான ஆதாரம் இருந்தாலும், அங்கு இருந்த விடயங்கள் குறித்து நீண்ட விசாரணை நடத்தப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினேஷ் ஷாப்டர் கடந்த 15ஆம் திகதி தனது மனைவியுடன் பிரித்தானியா செல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பொரளை மயானத்தில் காருக்குள் கைகள் பெல்ட்டினால் கட்டப்பட்டு கழுத்து கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
நிர்வாக அதிகாரி ஒருவர் அவரை மயானத்தில் பணிபுரியும் ஊழியர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதே நாளில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.
அவரது கார் இருந்த இடம் குறித்து கவனம் செலுத்திய புலனாய்வாளர்கள், மூன்று பக்கங்களையும் உள்ளடக்கிய மயானத்தின் “அனாதை பக்கம்“ எனப்படும் பகுதியை அடையாளம் கண்டுள்ளனர்.
பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாயை வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்தும், எதிர்பார்த்தபடி பணத்தை மீளப் பெற முடியாமல் நாளுக்கு நாள் நஷ்டமடைந்துள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான காணியொன்று மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளமை, யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்ட 85 கோடி ரூபா மீளப் பெற்றுக் கொள்ள முடியாமை தொடர்பான சிக்கல் நிலை, கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸுக்கு கொடுக்கப்பட்ட 160 கோடி ரூபாயில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பல வியாபாரப் பரிவர்த்தனைகளில் அவருக்கு 2,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நெருங்கிய குடும்பத்தினரின் வாக்குமூலத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் வசிக்கும் குருந்துவத்தை, மல் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்ததாக குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் வட்டாரங்களின்படி, பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், தினேஷ் ஷாப்டனின் மர்ம மரணம் தொடர்பாக சுமார் 70 சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
