வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பில் அமைச்சர் டக்ளஸின் பங்களிப்பு அலாதியானது : அமைச்சர் தினேஸ் பெருமிதம்
வடக்கின் கல்வி விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தொடர்ச்சியாக காண்பித்து வருகின்ற அக்கறையினாலேயே யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் குறித்த பிரதேசத்தில் கல்விசார் உட்கட்டமைப்புக்கள் கணிசமான வளர்ச்சியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிற்கும், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிற்கும் இடையில் பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில்,
வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், யாழ் பல்கலைக் கழகத்தின் சுகாதார சேவைகள் தொடர்பான பீடத்திற்கான 5 மாடிக் கட்டிடத்திற்கான நிதி மற்றும் பாடசாலைகளில் இந்துஸ்தாணி இசையைப் பாடசாலை பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளல் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த காலங்களில் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட, கடற்றொழில் மற்றும் கடல்சார் விஞ்ஞான பீடத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உருவாக்குதல், கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் வள முகாமைத்துவ பீடத்தினை திருகோணமலை வளாகத்தில் உருவாக்குதல், கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விசேட ஒதுக்கீடு வழங்குதல் போன்றவை உட்பட பல்வேறு விடயங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வடக்கின் கல்வி விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக காண்பித்து வருகின்ற அக்கறையினாலேயே யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் குறித்த பிரதேசத்தில் கல்விசார் உட்கட்டமைப்புக்கள் கணிசமான வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் நிலவி வருகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று வருவதாகவும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அபிவிருத்தி மற்றும் பன்மொழி திறமை வாய்ந்த ஆசிரியர் நியமனங்கள் போன்ற விடயங்களிலும், அவதானம் செலுத்தப்படுவது குறித்தும் குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |