இலங்கையில் வரப்போகும் அதிரடி மாற்றம் - பொது மக்களுக்கு இலகுவாகப்போகும் நடவடிக்கைகள்
2026இன் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நவீன அடையாள அட்டை கட்டமைப்பு
மேலும் தெரிவிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு செய்து, நவீன அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையானது நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும். விரல் அடையாளங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம் வங்கிச் சேவைகள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.

அடையாள உறுதிப்படுத்தல்
தொலைவிலிருந்தே அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். ஒரேடியாகப் பழைய முறையை மாற்றாமல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளும் தற்போதைய சாதாரண அடையாள அட்டைகளும் இணையாகச் செல்ல அனுமதிக்கப்படும்.
இது பொதுமக்களின் சேவைகளில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என சுட்டிக்காட்டியுள்ளார்.