கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகை உமிழ்வு சோதனை பிரிவினால் சோதனை செய்யப்பட்ட டீசல் வாகனங்களில் 50 சதவீதம் தீங்கு விளைவிக்கும் கருப்புப் புகையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை கருப்புப் புகையை வெளியிடுவதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,000 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்று புகை உமிழ்வுப் பிரிவு பணிப்பாளர் தசுன் ஜனக கமகே கூறியுள்ளார்.
கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்கள்
இதற்கமைய, அதிக வாகனப் பயன்பாடு உள்ள 12 மாவட்டங்களில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நடமாடும் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தீங்கு விளைவிக்கும் கருப்புப் புகையை வெளியிடுவதாகக் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு, அதனை சரிசெய்ய 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறைபாடுகளைச் சரிசெய்யத் தவறும் வாகன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகைய வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் புகை உமிழ்வுப்பிரிவு கூறியுள்ளது.