மோடி - பசில் சந்திப்பு நடைபெறுமா?
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நேற்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த சந்திப்பு நேற்றைய தினம் திட்டமிட்டவாறு நடைபெறவில்லை எனவும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட பிரச்சினையால் இவ்வாறு சந்திப்பு மேற்கொள்ள முடியவில்லை என்றும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ச இன்றைய தினம் நாடு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பசில் நாடு திரும்ப முன் பிரதமருடனான சந்திப்பு நடைபெறுமா என்பது சந்தேகமே என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு உதவி கோரும் நோக்கில் பசில், இரண்டு நாள் இந்திய விஜயத்தை மேற்கொண்டார்.
முதலீடுகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்திய பிரதமர் மோடியுடன், பசில் பேச்சுவார்த்தை நடத்துவார் என முன்னதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறெனினும், இந்தியாவின் உயர்மட்ட ராஜதந்திரிகள் சிலருடன் அமைச்சர் பசில் சந்திப்புக்களை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.