ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் அங்கு கடமையிலிருந்த 36 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்ரிஜென் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய பொலிஸார் ஐவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேவேளை தொற்றுக்குள்ளாகிய பொலிஸாருடன் கடமையிலிருந்த 36 பொலிஸாரும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


