சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி: எஸ்.எம். மரிக்கார்
கோவிட் - 19 வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கி, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள நிலையில், அதனை தாமதப்படுத்தி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவையற்ற பிரச்சினை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உடல்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தை தேடி, கோவிட் தொடர்பான நிபுணர்கள் குழு, இறுதியான வழிக்காட்டலை வழங்கும் வரை உடல்களை அடக்கம் செய்வதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.
பிரதமர் கூறியுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள சூழலில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவையற்ற பிரச்சினையை நாட்டுக்குள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.
உண்மையில் அறிவியல் காரணங்கள் இன்றி கடந்த காலத்தில் அவசர அவசரமாக உடல்களை தகனம் செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலைமையில், தொடர்ந்தும் இதனை தாமதம் செய்தால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
