மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்
மட்டக்களப்பில் வெள்ளம் மற்றும் டித்வா புயல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடுகளும் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா மேற்கு பகுதியில் உள்ள காளிகோயில் வீதிக்கான புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு இன்று(2.1.2026) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி
அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையிலும் எங்களது அபிவிருத்தி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் பாரிய சூறாவளி தாக்கத்தின் ஊடாக நாட்டில் பல வீதிகள் பாலங்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளாகப்பட்டிருந்தது. அந்த வேலைகளையும் நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
வெள்ள அனர்த்தம் சூறாவளி தாக்கம் காரணமாக எங்களது அபிவிருத்தி செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
நாங்கள் மீண்டும் வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கின்ற செயல்பாடுகளை முன்முரமாக செயல்படுத்துவதற்கு ஆரம்பித்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.