மட்டக்களப்பில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்: அமைச்சர் விசேட அறிவிப்பு
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நெல்லை உலர்த்துவதற்கான இயந்திரங்களை பொருத்துவதற்கான நிதிகளை அரசாங்கம் வழங்கும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் விசேட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று(25.02.2026) மாலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் அண்மைக்காலமாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் யானை பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
கடந்த காலத்தில் இந்த யானைப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
யானைகளை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய அமைச்சரும் வருகை தந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான தீர்வு வழங்கப்படும் என்று கூறிச்சென்ற நிலையிலும், இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படாமல் வவுணதீவு மட்டுமன்றி மட்டக்களப்பு நகரும் தற்போது யானைகளினால் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

கூட்டங்கள் கூட்டப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் காலத்தினையும் நேரத்தினையும் வீண் விரயம் செய்யும் வகையில் கூட்டங்களை நடத்தவேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது வவுணதீவு பிரதேசத்திற்கு அண்மையாகவுள்ள மாந்தீவு பகுதியில் உள்ள யானைகளை அங்கிருந்து வெளியேற்றி யானைகள் உள்ள காடுகளுக்கு கொண்டுசெல்வது குறித்து ஆராயப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான அனைத்துவளங்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் ஆட்கள் பற்றாக்குறைக்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர், விவசாயிகள், பிரதேசசபை ஊழியர்கள், வாகனங்களையும் பயன்படுத்துமாறும் ஓரிரு தினங்களுக்குள் யானைகளை வெளியேற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பிரதேசத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளுக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் அதிகாரிகள் மிகவும் மோசமாக செயற்படுவதாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், சீரற்ற காலநிலையின் போது அறுவடைகள் நடைபெற்ற நிலையில் நெல்லை உலர்த்துவதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்வதில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் பொலன்னறுவையிலிருந்தும் இந்த முறை நெல்கொள்வனவு செய்பவர்கள் வராத நிலையில் தமது நெல்லை விற்பனை செய்வதில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கியதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி
இது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் எனவும் இப்பகுதிகளில் நெல்லை உலரவைப்பதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் அதற்கான பணத்தினை அரசாங்கம் வழங்கும் எனவும் இதன்போது அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதேசத்தில் மேலதிக களஞ்சியவசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தும் எனவும் அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று கன்னன்குடா பாலம் மற்றும் மகிழவெட்டுவான் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மிக மோசமான நிலையில் இருக்கும் பாலங்களை சரிச் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியாவின் தொழில்நுட்ப பிரிவினர் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், இரண்டு பாலங்களை அமைப்பதற்கான உறுதியை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் சுற்றுலா துறை அபிவிருத்தி, வனஇலாகாவின் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri