மீண்டும் நீதிமன்றில் தேசபந்து..
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) இன்றையதினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதன்படி, மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளார்.
வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், அன்றிலிருந்து அவர் தலைமறைவானார்.
பிணை கோரிக்கை
பல நாட்கள் தீவிர தேடுதல் மேற்கொள்ப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி சட்டத்தரணிகளின் ஊடாக தேசபந்து மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேசபந்துவை இன்று(10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்றையதினம் மீண்டும் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.