நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்
தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06.03.2025) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிடியாணை உத்தரவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும்,, நேற்று முன்தினம் (03.03.2025) மாத்தறை கொட்டவிலவில் உள்ள தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
எனினும் அவர் அங்கு வருகைத்தராத நிலையில், வெலிகம பொலிஸ் தலைமையகத்தின் அடுத்த நீதிமன்ற திகதி நாளை என்பதால், அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய பொலிஸார் புலனாய்வுப் பிரிவுகளை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பொலிஸார், முன்னாள் பொலிஸ் மா அதிபரைத் தேடி சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
