உத்தரவை மீறி நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த தேசபந்துவின் வாகனம்
மாத்தறை நீதவான் நீதிபதியின் உத்தரவை மீறி, நீதிமன்ற வளாகத்தினுள் தேசபந்து தென்னகோனின் வாகனம் வரவழைக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழக்கு விசாரணை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன் சுமார் 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன் நேற்று நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தனது வாகனத்தை நீதிமன்ற வளாகத்தினுள் வரவழைப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் மாத்தறை நீதவான் நீதிபதியும் மன்றாடியார் நாயகத்தின் வாதங்களுடன் இணக்கம் தெரிவித்திருந்தார்.
எனினும் அதனை மீறி தேசபந்து தென்னகோனின் மெர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனம் நீதிமன்ற வளாகத்தினுள் வரவழைக்கப்பட்டு, அவர் ஏறிச் சென்றுள்ளார்.
இது நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |