நாடாளுமன்றில் பசிலுக்கு ஆதரவாக பேசிய பிரதி சபாநாயகர்: வெளிப்படுத்திய தகவல்
ராஜபக்சர்களின் பரம்பரை வீடு எனப்படும் "மெதமுலன்ன" வீடும் பசில் ராஜபக்சவுக்கே சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாத விவாதங்களின் போது, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையின்போது, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரியூட்டப்பட்ட போதும் பசில் ராஜபக்சவின் வீடுகள் எவையும் பாதிக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, "மெதமுலன்ன" வீடும் கடந்த வன்முறையின் போது எரியூட்டப்பட்ட நிலையில், அதுவும் பசில் ராஜபக்சவுடைய வீடாகும் என்று சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் ஆசனத்தில் இருந்து கொண்டு, பிரதி சபாநாயகர், பசிலுக்கு ஆதரவாக கருத்துரைத்தமையை நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி கண்டித்தார்.
எனினும் உண்மையை வெளிப்படுத்த வேண்டியது தமது கடமை என்று அஜித் ராஜபக்ச குறிப்பிட்டார்.
இதனையடுத்து உரையாற்றிய நளின் பண்டார, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு தூரத்து உறவினர் என்ற தகவலும் உண்டு என்று தெரிவித்தார்.