அரிசியை களஞ்சிப்படுத்தி வைப்பதில் உணவு ஆணையாளர் திணைக்களம் தோல்வி
நாட்டில் அரிசி பற்றாக்குறையை தவிர்க்கும் முகமாக அரிசியை களஞ்சிப்படுத்தி வைப்பதில் உணவு ஆணையாளர் திணைக்களம் தோல்வி கண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வுத்துறை இதனை வெளிப்படுத்தியுள்ளது. 2012ம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள தமது 120 களஞ்சியங்களில் சுமார் 100,000 மெற்றிக்தொன் அரிசியை கையக்கப்படுத்தி வைக்க உணவு ஆணையாளர் திணைக்களம் தமது இயலாமையை காட்டியுள்ளது.
இதற்காக திறைசேரியில் இருந்து தமக்கான நிதி கிடைக்கவில்லை என்ற காரணத்தை திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கட்டிடங்கள் 300 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
எனினும் அவற்றில் அரிசி கையிருப்பு உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தேசிய கணக்காய்வுத்துறை தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை சொந்தக்காரர்களிடம் இருந்து அரிசியைக் கொள்வனவு செய்து சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு எற்பாடாத வகையில் நிலைமையை கட்டுப்படுத்தி வைத்திருப்பதே உணவு ஆணையாளர் திணைக்களத்தின் பணியாகும். எனினும் அதனை திணைக்களம் நிறைவேற்றவில்லை.
2012ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை திணைக்களம் திறைசேரியிடம் அரிசி கொள்வனவுக்கான நிதியை கோரவில்லை.
எனினும் 2016இல் இருந்து 2019 வரையான காலப்பகுதியில் 256 மில்லியன், 1.1பில்லியன், 1.1 பில்லியன், 2.4பில்லியன் ரூபாய்களை திணைக்களம் திறைசேரியிடம் கோரியிருந்தது, எனினும் அந்த நிதியும் திறைசேரியில் இருந்து கிடைக்கவில்லை.
உணவு ஆணையாளர் திணைக்களத்துக்கு 120 களஞ்சியங்கள் இருந்தபோதும் அதில் 24 களஞ்சியங்கள் மாத்திரமே செயற்பட்டு வந்தன என்று தேசிய கணக்காய்வுத்துறை தெரிவித்துள்ளது.
