மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் (Photo)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி
பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பெரியகல்லாறு பகுதியில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் முழுமையான பங்களிப்புடன் இன்று காலை முதல் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சா.இராஜேந்திராவின் வழிகாட்டலின் கீழ், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரனின் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
டெங்கு நோயை ஒழிப்பதற்கான அறிவுறுத்தல்கள்
இதன்போது நுளம்பு பெருகும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
நுளம்பு பெருகும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்தோர் எச்சரிக்கப்பட்டதுடன் அவற்றினை தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக டெங்கு தாக்கம் தொடர்பான அறிவுறுத்தல்களும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்தியம்
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (4) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நோய் தொடர்பான ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாக காணப்பட்டுள்ளது.
வைத்தியரின் கோரிக்கை
இதனால், தங்களது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நியாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலில் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ சி.எம் பஸாலின் அறிவுறுத்தலில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, வீடு வீடாக சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் பரிசோதனையின் போது, நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டதோடு தங்களது வீட்டையும் அதனை சூழவுள்ள இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், எதிர்வரும் மழை காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதுடன் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தங்கள் வீட்டுச் சூழலை சுத்தம் செய்வதோடு தங்கள் வீடுகளில் காணப்படும் நுளம்புகள் பெருவதற்கு ஏதுவான பொருட்களை அழிக்குமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான பணியாளர் குழு மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.



