ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் என தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம்
வவுனியா நகரில் ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து அதிபர், ஆசிரியர்கள் தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக இன்று (06.10) காலை 10 மணிக்குக் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை வழங்கு, இலவசக் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, அரசே இலவச கல்வியைத் தனியார் மயப்படுத்தாதே, அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்கி பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகார், அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாதே, ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம்' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இலவச கல்வியைத் தனியார் மயப்படுத்துவதை நிறுத்தி சுபோதினி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட படி உரிய தீர்வை வழங்க வேண்டும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி கிராமப் புற பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால் மட்டுமே ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள்.
ஆசிரியர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நேர காலம் பாராது சேவை செய்வர். எமது பிரச்சனை தீர்க்கப்படும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.




