கிரான்குளத்தின் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு (Video)
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தின் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் விளையாட்டு மைதானத்தினை மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளும் நடவடிக்கையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த விளையாட்டுக்கழக இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்பட்ட பகுதியைத் தனது காணியெனக் கூறி
மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் அபகரிக்க முனைவதாகவும் இதன்போது
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அண்மையில் குறித்த பகுதிக்கு வந்த மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த காணி தொடர்பில் எந்த செயற்பாட்டினையும் மேற்கொள்ளவேண்டாம் எனத் தெரிவித்திருந்த நிலையிலும் குறித்த காணியை தவிசாளர் வேலியிட்டு அடைத்துள்ளதாகவும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எனவே குறித்த காணியை விளையாட்டு மைதானத்திற்காக முழுமையாகப் பெற்றுத்தருமாறும் தவிசாளரின் செயற்பாடுகளை நிறுத்துமாறும் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சிலர் கோசங்களை
எழுப்பியதையும் காணமுடிந்தது.