வவுனியாவில் எரிபொருள் கோரி ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்: இருவர் கைது (Video)
வவுனியாவில் எரிபொருள் கோரி ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் செயலி மூலம் வெளியாகிய தகவலுக்கு அமைய நேற்று இரவு முதல் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பலர் நீண்ட வரிசையில் நின்றனர்.
வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
ஆனால், இன்று காலை வரை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வராமையால் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியை விட்டு அகற்றியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடனும் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது எரிபொருள் இன்னும் வந்து சேரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றிய பொலிஸார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்களைப் பெற்ற பின் எச்சரித்து விடுதலை செய்துள்ளனர்.