சட்டத்தை நடைமுறைப்படுத்தாது ஜனநாயக சமூகம் முன்நோக்கி செல்ல முடியாது:பிரதமர்
சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்தாமல் ஜனநாயக சமூகம் ஒன்றுக்கு முன்நோக்கி செல்ல முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்
மக்களின் குரலுக்கு செவிமடுப்பது போலவே அண்மையில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அமைய நடவடிக்கை எடுக்க நேரிடும். அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதனை நோக்கி செல்லும் முதல் நடவடிக்கையாக இன்று காலை 22 வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பேச்சில் மாத்திரமல்ல, செயலிலும் விடயங்களை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், அதற்கான விடயங்களை முன்வைக்குமாறு் மீண்டும் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் நீண்டகாலம் கலந்துரையாடப்பட்ட தெரிவுக்குழு முறையை வலுப்படுத்தும் தேவையை ஜனாதிபதி கூறியதுடன் மாத்திரமல்ல அதற்காக நிலையியல் கட்டளைச் சட்டத்தில் மாற்றங்களை செய்வது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய பொறுப்பு
நாட்டின் அரசியல் கட்சிகள் என்ற வகையில் தற்போதை சவாலுக்கு மத்தியில் ஜனநாயக முறைக்கு அமைய செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது.
நாட்டில், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டும் போது. சிலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கஷ்டங்களை உணரலாம்.எனினும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டாது ஜனநாயக சமூகம் ஒன்று முன்நோக்கி செல்ல முடியாது.
அண்மைய காலத்தில் உருவான மக்களின் குரல்களுக்கு செவிசாயக்க வேண்டும். பொது அழிப்பை ஏற்படுத்தும் கொடூரங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு மூலம் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.