முல்லைத்தீவு மக்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை! (Video)
முல்லைத்தீவு - வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீர் ஏரிகள், மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொள்வதனால் வட்டுவாகல் பாலத்தினையும் சாலை முகத்துவாரத்தினையும் உடனடியாக வெட்டிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்திற்கு பாதிப்பு
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நந்திக்கடல் நீர் ஏரி நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக வெள்ளநீர் வழிந்தோடிவருகின்றது. இதனால் இந்த பாலம் ஊடாக போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
இரட்டைவாய்க்கால் சாலை வீதியில் மழைவெள்ளம் நிரம்பி காணப்படுகின்றது. சுமார் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் வலைஞர் மடம், அம்பலவன் பொக்கணை, மாத்தளன் மக்களின் போக்குவரத்து மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக தாழ்நில பிரதேசங்களை அண்டிய விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய செய்கைக்கு செல்லும் மூன்று பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மக்களின் கோரிக்கை
இதேவேளை, வீதிகளில் மழைவெள்ளம் தேங்கி நிற்பதனால் வட்டுவாகல் பாலத்தினையும் சாலை முகத்துவாரத்தினையும் உடனடியாக வெட்டிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
குறித்த பாதையை சரிசெய்வதால் தான் தொழில் செய்யமுடியும் என்று கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வட்டுவாகல் கடல் வெட்டுவது தொடர்பில் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் தீர்மானத்திற்கு அமையவே வெட்டப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மழைபெய்யுமாக இருந்தால் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளன், அம்பலவன், பொக்களை பகுதிகளில் மக்களின்
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.











