திருகோணமலை பொது வைத்தியசாலை குப்பை எரிக்கும் இடத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை (video)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் குப்பை எரிக்கும் இடத்தை உடனடியாக புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை எரிக்கும் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்து காணப்படுவதினால் அதிலிருந்து வெளியாகும் புகை மூட்டம் நோயாளர்கள் விடுதிக்குள் வருவதுடன் துர்நாற்றமும் வீசுவதாக சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் குற்றம்சாட்டுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் விடுதிக்குள் குப்பைகள் எரிப்பதினால் புகைமூட்டம் வருவதாகவும், உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
நோயாளர்கள் மட்டுமல்லாது வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்ப்பதற்கு வருகை தரும் உறவினர்களும் இது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைத்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
இந்நிலையில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் விடுதிக்கு பொறுப்பான தாதிய உத்தியோகத்தர்கள் முறைப்பாடு புத்தகத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும் வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகம்
கவனம் எடுத்து குப்பை எரிக்கும் இயந்திரத்தின் உடைந்த பகுதியை
புனரமைப்பதற்குரிய நடவடிக்கையின் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுக்கின்றனர்.