காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் - சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் வெளியி்ட்ட தகவல்
தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் யாழில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த பெண்ணின் காதலனும், அவரது மனைவியும் தங்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதற்கமைய, நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதான சந்தேக நபர் பயன்படுத்திய கார் , மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் நுவரெலியா பொலிஸார் மீட்டு காவலில் எடுத்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யாழ்ப்பாணம் சென்று கடல் மார்க்கமாக இந்தியா நோக்கி பயணிக்க இருந்ததாக யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.
மாறு வேடமணிந்து தப்பியோட்டம்
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் சாவகச்சேரிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கைத்தடிப் பகுதியில் சொகுசு பேருந்து ஒன்றில் தம்பதியினர் பயணிப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், வலான ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து நேற்று (24) அதிகாலை 4:30 மணியளவில் நடத்திய கூட்டுத்தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்ததோடு, கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சரணடையவிருந்ததாக வாக்குமூலம்
கைதான சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, தாம் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தங்களது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த வெற்றிகரமான கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண் மரணத்தில் சந்தேகம்
இதேவேளை, இயன்முறை பெண் மருத்துவரின் பிரேதப்பரிசோதனையின் முடிவில் இது சந்தேகத்திற்கிடமான மரணம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்த பெண்ணின் உடலிலிருந்து மூன்று பாகங்கள், பிறப்புறுப்புச்சளி மாதிரி, ஒரு கைநக மாதிரி மற்றும் ஒரு இரத்த மாதிரி ஆகியவை டி.என்.ஏ பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு, தடயவியல் மருத்துவரின் கடிதம் மூலம் அரச மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் சந்தேகநபரை கைது செய்யும் பொருட்டு, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா தலைவரும், நுவரெலியா விசேட பணியகமும் இணைந்து சந்தேகநபரின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அழைப்புகளை பகுப்பாய்வு செய்துள்ளது.
இதற்கமைய பல பகுதிகளின் தொலைபேசிப் பகுப்பாய்வு அறிக்கைகளையும் நேரலை இருப்பிடங்களையும் பெற்று, மாத்தளை, கட்டுகஸ்தோட்ட மற்றும் அலதெனியா பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் சரிபார்த்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியடைந்து இருந்ததாக தெரிவிக்கின்றன.