புதுப்பொலிவு பெறப்போகும் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை..! 300 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மேம்படுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மிருகக்காட்சிச் சாலையின் விலங்குக் கூண்டுகளின் தரம் மேம்படுத்தல், மிருகக்காட்சி சாலை வளாகத்தை மெருகூட்டுதல் மற்றும் நில வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த தகவல்களை விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார். மிருகக்காட்சிச் சாலையின் புனரமைப்புப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
மிருகங்களுக்கான அடிப்படை வசதிகள்
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்திர திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. மிருகங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூண்டுகளுக்குச் செல்லும் நடைபாதைகள், மற்றும் பாதைகளைச் சீரமைத்தல், கூண்டுகளைச் சுத்தம் செய்து மறுசீரமைத்தல், மற்றும் பழைய கூண்டுகளைச் சுத்தம் செய்து மேம்படுத்துதல் ஆகியவையும் இந்த ஒட்டுமொத்த புனரமைப்புப் பணிகளில் அடங்கும் என்று சந்தன தெரிவித்துள்ளார்.

கூண்டுகளை ஒன்றிணைப்பதன் மூலம் பல விலங்கினங்கள் ஒன்றாக வாழ அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மான் மற்றும் சாம்பார் மான் ஆகிய இரண்டின் கூண்டுகளும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் மற்றும் கருப்பு காண்டாமிருகங்களுக்கான தடுப்புக் கூண்டுகள் மேம்படுத்தப்படும்.
மின்சார கேபிள்கள் பதிக்க திட்டம்
மின் கம்பங்கள் மற்றும் தொங்கும் கம்பிகளை அகற்றி, மின்சார கேபிள்கள் மற்றும் கம்பிகள் நிலத்தடியில் பதிக்கப்படும். இது மிருகக்காட்சிசாலைக்கு மிகவும் இயற்கையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, விலங்குகள் மற்றும் பார்வையாளர்கள் இருவரின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்றும் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசமான வானிலையின் போது, மரக்கிளைகள் விழுந்தால் மேல்நிலை மின்சாரக் கம்பிகள் அறுந்து விழக்கூடும்.

மேலும் கம்பங்களும் கீழே விழக்கூடும். எனவே, நிலத்தடியில் மின்சாரக் கம்பிகளைப் பதிப்பது பாதுகாப்பை மேம்படுத்தும்.
10 மில்லியன் ரூபாய் செலவில் சிசிடிவி கெமராக்கள்
விலங்குகளைப் பாதுகாக்கவும், அவற்றின் நடத்தைகளைக் கண்காணிக்கவும் சிசிடிவி அமைப்பை நிறுவ மிருகக்காட்சிசாலை 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மிருகக்காட்சிசாலை கழிவறைகளை மேம்படுத்தவும், மற்றொரு கழிப்பறை வளாகத்தைக் கட்டவும் திட்டமிட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் இருக்கைகளுடன் கூடிய நிழல் தரும் இடங்களும் அமைக்கப்படும்.

விலங்குகளுக்கான உணவு வளர்க்கப்படும் கஹபொல மற்றும் கோணபொல பண்ணைகளையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், விலங்குகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பணியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் நிர்வாக அலுவலக கட்டமைப்புகள் நவீனமயப்படுததப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு - செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!