ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து தினேஷ் சந்திமால் கடும் அதிருப்தி
ஊடக நிறுவனங்கள் சரி பார்க்கப்படாத தகவல்களை வெளியிடக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமால் கோரிக்கை விடுத்துள்ளார்.
சரிபார்க்கப்படாத தகவல்கள் தேவையற்ற அழுத்தம் மற்றும் மன அழுத்தம், உணர்ச்சி பாதிப்புகளை வீரர்களுக்கு ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தான் தேவையான உடற்தகுதி (Fitness) பரிசோதனையை வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேவையான உடற்தகுதி பரிசோதனையை நான் வெற்றிகரமாக கடந்துள்ளேன். இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எனக்கு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பொதுவெளியில் கூடுதல் தகவல்களை வெளியிடத் தேவையில்லை எனவும், அணி முகாமைத்துவமும் தாமும் உண்மைகளை நன்கு அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊடக ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சந்திமால், சரிபார்க்கப்படாத தகவல்கள் ஒரு வீரரின் தொழில்வாழ்க்கை, புகழ் மற்றும் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.
வீரர்களின் தனிப்பட்ட மற்றும் நுணுக்கமான தகவல்கள் ஊகங்களுக்கு பயன்படுத்தப்படாமல், வீரர்களும் அணி முகாமைத்துவத்திற்கும் இடையே மட்டுமே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், இதுபோன்ற தகவல்களை வெளியிடும் போது தெளிவான ஆதாரங்களை குறிப்பிட ஊடக நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன எனவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அவசியம் எனவும் தினேஷ் சந்திமால் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், சில உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறிய பட்டியலை பல இலங்கை கிரிக்கெட் வீரர்களும் மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, ரசிகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சந்திமால், வீரர்களைச் சார்ந்த நுணுக்கமான தகவல்களை வெளியிடுவதற்கு முன் உண்மைகளை சரிபார்க்குமாறு ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri