எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்கள்
அனைத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவு செய்யப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(4) யாழ். ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தனது உத்தியோக பூர்வ முகநூலில் பதிவொன்றினை எழுதியுள்ளார். அந்த பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஐ.ஓ.சி நிறுவனத்தினால் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனால் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல அசௌகரியங்களுடன் பல நாட்களாக வீதிகளில் காத்திருக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் ஐ.ஓ.சி யாழ்ப்பாணம், ஐ.ஓ.சி நுணாவில், ஐ.ஓ.சி காரைநகர் ஆகிய மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
நடைமுறைகள்
யாழ்.மாவட்ட ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருளானது 73% பொதுமக்கள், 27% உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.
இன்று (05) வழங்கப்படவுள்ள எரிபொருள் விநியோகத்தின் போது, மாவட்டத்திலுள்ள ஐ.ஓ.சி நிலையங்களில் கடந்த ஒரு வாரத்துக்குள் எரிபொருளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மாத்திரம் வாகன இலக்க பரிசோதனையை தொடர்ந்து அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.
எரிபொருள் கையிருப்பை கணித்து, அனைவருக்கும் சம அளவில் விநியோகம் செய்யும் நோக்கில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
எதிர்வரும் நாட்களில் ஐ.ஓ.சி நிலையங்களில் இடம்பெறும் எரிபொருள் விநியோகங்களும், எரிபொருள் விநியோக அட்டையின் அடிப்படையில் இடம்பெறும்.
அறிவித்தல்
ஆகவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாத மக்கள் இவ்வாரத்துக்குள் பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவுகளை மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
அனைத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவு செய்யப்படும். அத்துடன் எரிபொருள் விநியோக பதிவுகள் யாவும் செயலி மூலமும் பதிவு செய்யப்படும்.”என தனது பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.