மன்னார் மாவட்ட படையினர் வசம உள்ள காணிகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை மக்களின் நலனை கருத்தில் கொண்டு விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (25) மாலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணி விடுவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, மேலதிக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குழுவினரும்,மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மற்றும் குழுவினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பான நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
உண்மையிலேயே இந்த மக்கள் கடந்த காலத்திலே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, தங்களது இடத்தை விட்டு வேறு இடங்களிலே குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.

யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து 17 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் கடந்து வந்த அரசாங்கங்கள் எவையுமே இவற்றை விடுவிப்பதற்காக எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
ஆனால் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியிலே பொது மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வேண்டுகோள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி கடந்த வருடம் இடம்பெற்ற சூறாவளியின் போது மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, மக்களினுடைய கோரிக்கையை அடுத்து, ஜனாதிபதி மிகவும் கரிசனையுடன் இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கோடு இன்றைய தினம் இந்தக் குழுவினரை நேரடியாக விஜயம் செய்வதற்கு உத்தரவிட்டிருந்தார்.
நியாயமான தீர்வு
மேற்படி, நாங்கள் முதலாவதாக முள்ளிக்குளம், அதனைத் தொடர்ந்து சிலாவத்துறை கடற்படை முகாம், அதனைத் தொடர்ந்து தலைமன்னார், வங்காலைப்பாடு, பள்ளிமுனை போன்ற இடங்களிலே உள்ள கடற்படை முகாம்களைப் பார்வையிட்டோம்.
அங்கே மக்களினுடைய காணிகள் விடுவிக்கப்படவிருக்கின்றன. குறிப்பாக முள்ளிக்குளம் பகுதியில் பாடசாலை, தேவாலயம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் மக்களினுடைய குடியிருப்புகள் காணப்படுகின்றன. மக்கள் தொழிலுக்குச் செல்லக்கூடிய பாதைகளும் மூடப்பட்டிருக்கின்றன.
மேற்படி இடங்களை விடுவிப்பதற்கு உரிய சாதகமான சூழ்நிலைகள் இருக்கிறது. இன்றைய தினம் சேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஜனாதிபதி முன்னிலையில் முன்வைக்கப்படும்.

அங்கு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, இந்த மக்களுக்கு நியாயமான தீர்வு அல்லது சாதகமான முறையிலே தீர்வு வழங்கப்படுகின்ற அதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
உங்களுக்குத் தெரியும், தற்போது எங்களுடைய நாட்டிலே மிகவும் மோசமான நிலையிலே இந்த போதைப்பொருள் கடத்தல்கள், போதைப்பொருள் விற்பனைகள் போன்றன இடம்பெறுகின்றன.
அவற்றில் கணிசமானவை மன்னார் பகுதியிலிருந்தும் இடம்பெறுவது தெரிந்த விஷயம்.எனவே, அவற்றினையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள்
அதேபோல் சட்டவிரோத செயல்பாடுகள், இதைவிட இந்திய கடற்றொழிலாளர்களுடைய அத்துமீறல்கள், மேற்படி விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிச்சயமாக இந்த கடற்படையினரின் உதவி தேவை.நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலேயும் மக்கள் கூறியிருக்கின்றார்கள்.
மேற்படி விடயங்களையும் நாங்கள் கருத்தில் கொண்டு, மக்களுடைய காணிகளையும் விடுவிக்கிறதைக் கருத்தில் கொண்டு, ஒரு பொதுவான தீர்மானத்தை நாங்கள் நிச்சயமாக எதிர்காலத்திலே எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலே, மக்கள் விரும்புகின்ற, மக்களால் தெரிவு செய்யப்பட்ட, குறிப்பாக வடக்கு மாகாணத்திலே தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்த மக்களுக்கான அரசாங்கம் என்ற வகையிலே, அவர்களது நம்பிக்கை நிச்சயமாக வீண் போகப்போவதில்லை.

நாங்கள் ஒரு சாதகமான முடிவுகளை நிச்சயமாக இந்தப் பாதுகாப்பு கவுன்சிலில் எடுப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
அந்த வகையிலே இன்றைய தினம் இங்கே வருகை தந்திருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு, நாங்கள் எங்களுடைய அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த மக்களுடைய குறைகளை படிப்படியாக எதிர்காலத்திலே தீர்த்து வைப்போம் என்ற விடயத்தையும் இந்த இடத்திலே கூறிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் கருத்து
ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை (25.05.2026) காலை மன்னாரிற்கு வருகை தந்த நிலையில் கடற்படையினர் வசம் இருக்கின்ற தனியார் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
இன்றைய தினம் கடற் படையினர் வசம் உள்ள காணிகளுக்கு நேரடியாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
முள்ளிக்குளம்,சிலாபத்துறை,தலைமன்னார்,வங்காலைப்பாடு,மற்றும் பள்ளிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளை குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
விசேட கலந்துரையாடல்
மக்கள் கடந்த காலத்திலே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, தங்களது இடத்தை விட்டு வேறு இடங்களில் குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து 17 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக இருக்கிறது . இதன் போது பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களும் அங்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,து.ரவிகரன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதோடு, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, மேலதிக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது, குறித்த விஜயம் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு
அங்குபாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உபாளி சமரசிங்க மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோர் இந்தப் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளர்களுடன் இணைந்து, முள்ளிக்குளம், பள்ளிமுனை, சிலாவத்துறை, வங்காலைப்பாடு மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் நிலங்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள், விவாதங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடினோம்.

இது தொடர்பாக நாங்கள் ஒரு நல்ல புரிதலையும், தகவல்களையும் தற்போது பெற்றுள்ளோம். அதன்படி, இந்தத் தகவல்களை நாங்கள் தனித்தனியாக தொகுத்து, பாதுகாப்பு பேரவைக்கு சமர்ப்பித்து, இந்த காணிப் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
கடற்கரை சார்ந்த பகுதிகளிலும், உள்நாட்டுப் பகுதிகளிலும் பல சட்ட விரோதச் செயல்கள் நடப்பதால், தேசிய பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்.
கடற்படையினர் இரவும் பகலும் பாராது மக்கள் பாதுகாப்புக்காகவும், இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தேசிய பாதுகாப்புக்காகவும் செய்யும் சேவைகள் குறித்தும் நாங்கள் அறிவோம்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றல்
நாங்கள் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடாமல், எமக்குக் கிடைக்கக்கூடிய நிலங்களில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு சுமுகமாகத் தீர்ப்பது என்பது குறித்தே கலந்துரையாடியுள்ளோம்.
இங்கு பெற்றுக்கொண்ட தகவல்களை, அடுத்து வரவிருக்கும் பாதுகாப்பு பேரவை கூட்டங்களிலும், ஜனாதிபதியிடமும், நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்புக் குழுவிலும் சமர்ப்பித்து, மேலும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதே எமது நோக்கமாகும்.நாங்கள் கொழும்பில் இது குறித்துக் கலந்துரையாடினோம்.
அதன் காரணமாகவே, நடைமுறை ரீதியாக இந்த இடங்களுக்கு நேரடியாக வந்து பார்வையிடுவது எமது கடமையாக இருந்தது.

அரசாங்கத்தின் பொறுப்பு என்னவென்றால், பொதுமக்கள் இந்த நிலங்களிலிருந்து வேறு இடங்களுக்கு சென்றிருந்தால், அவர்களை மீண்டும் குடியேற்றுவதற்கு குடியேற்ற அமைச்சு மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகும்.
அரசாங்கம் எப்போதும் எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தப் பொறுப்புடன் நாங்கள் பிணைக்கப்பட்டுள்ளோம்.
தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் இந்த கடற்கரையோரப் பகுதிகளில் பல சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். அவற்றை ஒழிப்பதுதான் எமது முதலாவது பொறுப்பாகும்.அவற்றை ஒழிப்பதுதான் எமது முதலாவது பொறுப்பாகும். அதன் மூலம் பொது மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்.

கடற்றொழில் நடவடிக்கைகளின் மறைவில், பெரிய அளவில் சட்டவிரோத வியாபாரங்கள் மற்றும் கடத்தல்கள் இடம்பெறும் பகுதிகளாக இந்த மன்னாரிற்கு கீழேயுள்ள கடற்கரைப் பகுதிகள் காணப்படுகின்றன. எனவே கடற்படையினர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இது குறித்து நாங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துகிறோம். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, எமது மக்களுக்காக மிக விரைவில் ஒரு நல்ல தீர்வை நாங்கள் பெற்றுக்கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.