நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் சில முடிவுகளே காரணம்: பாரத் அருள்சாமி(Video)
ஸ்த்திரமான பொருளாதார கொள்கை இன்மையால் அரசாங்கத்தினால் எடுக்கப்படட சில தீர்மானங்கள் இன்று பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரஜாசக்தி அமைப்பின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“1948 முதல் அரசாங்கத்தால் எடுக்கப்படட சில முடிவுகள் இன்று தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகமான வாக்குகளை பெற்றிருந்தாலும் பதவி விலக்கியமைக்கு காரணம் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்தது தான்.
மக்கள் அரசாங்கம் மீதும்,ஆட்சியாளர்கள் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். எனவே மக்கள் எதிர்பார்க்கின்ற நம்பகத்தன்மையை ஒரு கட்டமைப்பின் ஊடாக வென்றெடுப்பது தான் எமது முதன்மையான செயற்பாடாக அமையும்.
இதற்கு மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்து அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டும்.”என கூறியுள்ளார்.