குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
குருந்தூர் மலை மற்றும் திரியாய் விகாரைகளின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இவ்வாறு முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரைக்கு 3,000 ஏக்கர் காணியும் திருகோணமலை, திரியாய் விகாரைக்கு 2,000 ஏக்கர் காணியும் கோரப்பட்டுள்ளன.
வனவள பாதுகாப்பு திணைக்களம், காணி திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான அரசாங்க காணிகளில் இந்தளவு காணிகளை தொல்பொருள் பிரதேசங்களென தெரிவித்து எத்தகைய அடிப்படையில் கோரப்படுகிறதென்பதை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஞ்ஞானப்பூர்வத் தரவுகள் வேண்டும்
அந்த வகையில் பௌத்த தலைமையகமாக கருதப்படும் அநுராதபுரம் மஹாபோதி விகாரைக்கோ அல்லது சிறந்த பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கணிக்கப்படும் சிகிரியாவுக்கும் இந்தளவு காணிப்பரப்பு இல்லை.
எனினும், குருந்தூர்மலை விகாரை மற்றும் திரியாய் விகாரை ஆகியவற்றுக்கு இந்தளவு காணிகள் எந்த அடிப்படையில் கோரப்பட்டுள்ளதென்பதை விஞ்ஞானப்பூர்வத் தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இந்த நிபுணர்கள் குழுவை நியமிக்கவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
