ஏழு பௌத்த பிக்குகள் தொடுத்த குருந்தூர்மலை வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாக தெரிவித்து, மணலாறு சப்புமல் தென்ன ஆராண்ய விகாராதிபதி உள்ளிட்ட ஏழு தேரர்களால், முறைப்பாடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்று(08.06.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
வழக்கினை ஆராய்ந்த நீதவான் குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும்,வினோ நோகராதலிங்கம் ஆகியோரை அடுத்த தவணையின்போது மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியை பௌத்த பிக்குகள் மேற்கொண்டிருந்தனர்.
ஜனநாயக ரீதியிலான போராட்டம்
இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாக தெரிவித்து, மணலாறு சப்புமல் தென்ன ஆராண்ய விகாராதிபதி உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |