கிளிநொச்சியில் பால் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பால் விநியோகத்தை மாவட்ட மக்களுக்கு கிடைக்கூடிய வகையில் மேம்படுத்துவதுடன் மாவட்டத்தின் தேவைக்கு மிஞ்சிய பாலையே வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமென கால்நடை வளர்ப்போருக்கான விசேட கலந்துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போருடனான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) பிற்பகல் கிளிநொச்சி மாவட்டசெயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் போது, கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்போரின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான இக் கலந்துரையாடலில் கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்கள், கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளுடன், மாவட்டத்தின் முன்னணி கால்நடை வளர்ப்போர், உள்ளூர் மற்றும் தனியார் பால் சேகரிப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மேற்கொள்ளும் பால் சேகரிப்பு, விநியோகம், பெறுமதிசேர் உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளிலும் எதிர்நோக்கப்படும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கான தீவனங்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், கால்நடைத் தீவனமாக புல் உற்பத்தியில் ஈடுபடுவதுடன், அதிலிருந்து சைலேஜ் எனப்படும் கால்நடைத் தீவன உற்பத்தியிலும் கால்நடை வளர்ப்போர் கவனம் செலுத்த வேண்டும் என்று இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து அதிகளவு எண்ணிக்கையான பட்டி மாடுகளை வளர்ப்போர் எதிர்கொள்ளும் மேய்ச்சல் தரவைப் பிரச்சினை தொடர்பாக இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கனகாம்பிகைக்குளம் பகுதியில் ஏற்கனவே மேய்ச்சல் தரவைக்கென ஒதுக்கப்பட்ட காணியை உரிய தேவைக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டதுடன், பூநகரி பள்ளிக்குடா மற்றும் முழங்காவில் பிரதேசங்களிலும் மேய்ச்சல் தரவைக்கான ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதேவேளை, பெரும் எண்ணிகையில் கால்நடை வளர்ப்போர் அதனை ஒரே இடத்தில் பட்டியாக அடைத்து வளர்ப்பதன் மூலம் கால்நடை கழிவுகளிலிருந்து தரம் வாய்ந்த சேதன உரத் தயாரிப்பில் ஈடுபடும் சாத்தியப்பாடுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இவை தவிரவும், புறவேலித் திட்டம், மேய்ச்சல் தரவைகளுக்குள் அத்துமீறிய பயிர்ச்செய்கை, ஆற்றுப்படுக்கை, ஒதுக்கீட்டுக் காணிகளை மேய்ச்சல் தரவையாக பயன்படுத்த ஏற்பாடு செய்தல், கால்நடைகளுக்கான காப்புறுதி, வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைகளில் கால்நடைகள் விபத்துக்குள்ளாவதை தடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், பயிர்ச்செய்கையாளர்களுடன் இணைந்து முடிவு எடுக்கப்படவேண்டிய விடயங்கள்
தொடர்பாக இணைந்த கூட்டமொன்றை எதிர்காலத்தில் நடத்துவது எனவும், தொடர்ந்து
குறிப்பிட்ட கால இடைவெளியில் கால்நடை வளர்ப்போருக்கான கூட்டங்களை நடத்துவது
என்றும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.