இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மூன்று நாடுகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கைக்கான கடன் பேச்சுவார்த்தை நடைமுறையில் அனைத்து கடன் வழங்குநர்களும் இணைந்துகொள்ள முடியும் என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷூனிச்சி சுஸூகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனா இணைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான பொதுவான தளமொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகியன இன்று அறிவித்துள்ளன.
நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் கடன் சுமையைத் தீர்ப்பதற்கு இந்த செயன்முறை ஒரு முன்மாதிரியாக அமையும் என இந்த மூன்று நாடுகளும் நம்புவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவான தளம்
இந்நிலையில், இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கான பொதுவான தளமொன்றை அமைக்கும் நடவடிக்கை வரலாற்று ரீதியானது என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷூனிச்சி சுஸூகி தெரிவித்துள்ளார்.
Paris Club போன்ற செல்வந்த கடன் வழங்குநர்கள் மாத்திரமின்றி, சீனா போன்ற வளர்ந்து வரும் கடன் வழங்குநர்களும் கடன் மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடன் மறுசீரமைப்பிற்கான புதிய தளத்தில் அனைத்து கடன் வழங்குநர்களும் இணைவதற்கான சந்தர்ப்பம் எப்போதும் திறந்த நிலையிலேயே உள்ளதாகவும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷூனிச்சி சுஸூகி தெரிவித்துள்ளார்.