தேசபந்துவுக்கு எதிராக ஒரு முக்கிய விவாதம்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது குறித்து எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஒரு முக்கியமான விவாதத்தை நடத்த நாடாளுமன்ற அலுவல்கள் குழு திட்டமிட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
முக்கிய விவாதம்
இலங்கையின் சட்ட நடைமுறையாக்கத்தில் கொந்தளிப்பான காலகட்டத்தில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய தேசபந்து தென்னகோன், தனது நடத்தை மற்றும் தலைமைத்துவம் குறித்து பெருகிவரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், அவரது நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு, அண்மையில் சபாநாயகரிடம் தமது அறிக்கையை கையளித்திருந்தது.
இந்த குழு, தேசபந்து தென்னகோன் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளதாக தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




