தனிமையில் வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு தங்க ஆபரணங்கள் கொள்ளை! (Photos)
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்துவரும் 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையாடிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (27) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது 15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதுடைய சுலைமான் செய்யது புஹாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது தயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் குறித்த மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.