டிங்கரின் லசந்த கொலை செய்யப்படுவார் என்று பொலிஸ் மா அதிபருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதா?
பொலிஸார் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகளைச் செய்கின்றனரா என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த எனப்படும் டிங்கரின் லசந்த என்பவர் நேற்று காலை கொலையுண்ட சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
சட்டவிரோத படுகொலைகள் மேற்கொள்ளப்படும் போதான சகல அம்சங்களும் டிங்கரின் லசந்தவின் மரணத்தில் காணப்படுகிறது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இது நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும். தமது கட்சிக்காரர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக லசந்த சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரிடம் சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் தமது கட்சிக்காரர் கொல்லப்பட்டதாக அறிவிப்பதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் எனவும் அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளர்.
இந்த தகவலை அடுத்து சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பொலிஸ் மா அதிபருக்கும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் மின்னஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தி ஊடாகவும் இது குறித்து அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தற்போதைய வட மாகாண ஆளுநரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தலைவருமான ஜீவன் தியாகராஜாவிற்கும் அறிவித்துள்ளார்.
கைதியின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என வட மாகாண ஆளுனர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி மனித உரிமை ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரிகளும் குறித்த சந்தேக நபர் கொலை செய்யப்படுவதனை தடுக்க பொலிஸாரிடம் கேரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கைதிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென நிதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை பொலிஸார் உதாசீனம் செய்து வரும் போக்கினையே அவதானிக்க முடிகின்றது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புடைய நபர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கலாச்சாரம் நீடித்து வருவதாகவும் இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்ட விரோத படுகொலைகளுக்கான பொறுப்பு கொலை செய்யும் நபர்களை மட்டும் சாராது எனவும் அதற்கான உத்தரவு பிறப்பிப்போர், சம்பவத்தை மூடி மறைப்போரையும் சாரும் என தெரிவித்துள்ளது.
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபரை ஏன் பாதுகாக்க முடியவில்லை என்பதனை பொலிஸ் மா அதிபர் விளக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளின் அடிப்படையில் அண்மையில் இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகள் வழங்குவதனை இடைநிறுத்துவதாக ஸ்கொட்லாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri