அவிசாவளையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தமிழ் யுவதி மரணம்
முன்னணி ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 14 வருடங்களாக பணி புரிந்து வந்த தமிழ் யுவதியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை, சீதாவகபுர பகுதியில் இயங்கி வரும் முன்னணி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நிர்வாகம் விடுமுறை தரவில்லை
பரமசிவம் புஷ்பலதா எனப்படும் குறித்த யுவதி கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடர்ச்சியாக பணி புரிந்து கொண்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக தொழிற்சாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்த போதிலும் அவருக்கான பணி நேரம் நிறைவடையும் வரையில் அவர் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதேவேளை, இவ்வாறு நிர்வாகத்தினரின் பொறுப்பின்மை காரணமாக உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு நீதி கோரிய சமூக ஆர்வலர்கள் அவிசாவளை நகரில் துண்டுபிரசுரங்களை விநியோகித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அச்சுறுத்தல்
மேலும் வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம் மற்றும் ஐக்கிய பொது தொழிலாளர் சங்கத்தின் இரண்டு ஆர்வலர்கள் இந்த சம்பவம் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
விடுப்பு உரிமை மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கி சேருவதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்னணி நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட குழுவினர் மூலமே இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.