மரணச் சான்றிதழ்கள் சர்ச்சையாகின
பெருந்தோட்டங்களில் இடம்பெறும் திடீர் மரணங்கள், கோவிட் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு குறித்த தோட்டங்களில் பணி புரியும் தோட்ட மருத்துவ உதவியாளரக்ள் மரணச் சான்றிதழை வழங்குகின்றமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள், அரச வைத்தியர்கள், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் டிக்கோயா வைத்தியசாலையின் விசேட நீதிமன்ற வைத்தியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பசீர் மொஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பசீர் மொஹமட் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களாக இருக்க வேண்டும். ஆனால் பெருந்தோட்டங்களில் வைத்தியர்களாகக் கடமையாற்றுபவர்கள் மருந்தகங்களில் பல காலங்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.
எனவே பெருந்தோட்டங்களில் எவராவது திடீரென உயிரிழந்தால் அல்லது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் அது தொடர்பான மரணச் சான்றிதழை விநியோகிக்கும் அதிகாரம் அருகிலுள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்தியர்களுக்கு மட்டுமே உண்டு. எனினும் சில பெருந்தோட்டங்களில் திடீர் உயிரிழப்பு அல்லது கோவவிட் மரணம் சம்பவிக்கும்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மரண சான்றிதழ்களை விநியோகித்துள்ளமை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு விநியோகிக்கப்பட்ட மரண சான்றிதழை அடிப்படையாக கொண்டு பெருந்தோட்டங்களில் கோவிட் தொற்றால் உயிரிழந்த பலரது சடலங்கள் தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டு உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.