வவுனியாவில் காயங்களுடன் 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு - விசாரணைகள் தீவிரம்
வவுனியா - லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து சில விடயங்கள் தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் சடலமாக மீட்கப்பட்ட உதயச்சந்திரன் சஞ்சீவன் கடைசி பிள்ளை. இவருக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர்.
இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன், பெரிய வீடு ஒன்றுக்கான நிர்மாணப் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும், அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றையதினம் இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளதை தொடர்ந்து இன்று காலை தாயார் வைத்தியசாலைக்கும், தந்தை வேலைக்கும் சென்றிருந்த நிலையில் சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் சிறுவன் சடலமாக கிடந்துள்ளார். அதன் பின்னர் சகோதரிகள், சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு சென்ற சகோதரன் சடலத்தை பார்த்த போது முகத்தில் காயங்களுடனும், கழுத்தில் வெட்டுக்காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சிறிய பூங்கன்று ஒன்றில் துணி ஒன்றும் கட்டப்பட்டிருந்துள்ளது. இது சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன், தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை பார்வையிட்டதுடன், சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்துள்ளனர்.
எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் எவ்வித தகவல்களுடம் கிடைக்காத நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பிரேத பரிசோதனை அறிக்கையினைப் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியா - லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்பகுதியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
